பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வாடகை வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அவர், பெங்களூருவில் வசிக்கும் தனது கணவர் பிபின் சந்திராவிடம் வீடியோ காலில் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கான பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத பிபின் சந்திரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. “உன்னைப் போல் என்னை யாரும் நேசித்ததில்லை, உன்னுடன் சேர்ந்து வாழவும் பயணங்கள் செல்லவும் பல கனவுகள் கண்டேன், ஏன் என்னை விட்டுப் போனாய் பேபி?” என அவர் பதிவிட்டுள்ள கண்ணீர் வரிகள் காண்போரை கலங்கச் செய்துள்ளது. சுபாஷினியின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
