ஈரானின் ஒட்டுமொத்த மனித நாகரிகமே அழித்தொழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் உலக நாடுகளிடையே நிலவி வந்த போர் பதற்றம், தற்போது தற்காலிகமாக தணிந்துள்ளது. பாகிஸ்தான் முன்மொழிந்த இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த ஈரான்-அமெரிக்கப் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மஸ் நீர்வழிப்பாதையைத் திறக்க ஈரான் முன்வந்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
இந்த போர் நிறுத்தம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ராணுவ நடவடிக்கைகள் மூலம் தாங்கள் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிப் பல சாதனைகளைச் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடமிருந்து பெறப்பட்ட 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஹார்மஸ் ஜலசந்தியை உடனடியாகவும், முழுமையாகவும், பாதுகாப்பாகவும் திறந்தால் மட்டுமே இந்த இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்பதையும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃபின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தங்களின் 10 அம்சப் பட்டியலை அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு ஏற்றுக்கொண்டதாலும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானிய ஆயுதப் படைகள் தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளைக் கைவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹார்மஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஈரான் ஒருங்கிணைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வார கால இடைவெளியை ஒரு நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், நீண்ட காலப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை உருவாக்கவும் இந்த சமயம் ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஈரானின் இந்த இணக்கமான முடிவால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும், போர் அச்சத்தில் இருந்த உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Statement on behalf of the Supreme National Security Council of the Islamic Republic of Iran: pic.twitter.com/cEtBNCLnWT
— Seyed Abbas Araghchi (@araghchi) April 7, 2026
