பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் (Punjab & Sind Bank) காலியாக உள்ள 1,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, இதில் பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. தமிழ் மொழி தெரிந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (01.03.2026 தேதியின்படி). அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வணிக அல்லது கிராம வங்கிகளில் குறைந்தபட்சம் 18 மாதங்கள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மொழித் தகுதித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வானது ஆங்கிலம், வங்கி அறிவு மற்றும் கணினித் திறன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்பக்கால அடிப்படைச் சம்பளமாக ரூ.48,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது தகுதியின் அடிப்படையில் ரூ.85,920 வரை உயர வாய்ப்புள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsind.bank.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் நாள் ஏப்ரல் 20, 2026 ஆகும். 10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வங்கித் துறையில் கால்பதிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
