உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியர்களின் ஆரோக்கியம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த சுமார் 5,000 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, சொந்த ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வீட்டு வேலைகளிலேயே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் இந்தியர்கள், தங்களுக்குத் தேவையான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்கின்றனர். தூக்கத்தைப் புறக்கணிப்பதன் மூலம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுக்கும், நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி உருவாகி வருவது எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 42.5 சதவீத இந்தியர்கள் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்காமல் ஒதுக்கிவிடுவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் மற்றுமொரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது 57.8 சதவீதத்தினர் தங்களுக்கு எவை நல்லது என்று தெரிந்தும், அதனை முறையாகப் பின்பற்றுவதில் தோல்வி அடைவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 46 சதவீதத்தினர் உடல் பராமரிப்பு முயற்சிகளைத் தொடங்கினாலும், அதனைத் தொடர முடியாமல் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். எனவே, இந்தியர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஒரு சவாலாக இல்லை; மாறாக, தெரிந்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைத் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாற்றுவதே தற்போதைய பெரும் சவாலாக உள்ளது என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
