அகமதாபாத்தில் ரெடிமேட் மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட ஒரு குடும்பத்தில், நான்கு வயது சிறுமி மற்றும் மூன்று மாத பச்சிளம் குழந்தை என இரு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோசை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்குக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தற்போது அவரது பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, தோசை சாப்பிடாத மூன்று மாத பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளான். தாய்ப்பால் மூலமாகவே விஷம் கலந்த பாதிப்பு குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசாரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் அந்த ரெடிமேட் மாவு பாக்கெட்டைக் கைப்பற்றி ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த மாவில் நச்சுத்தன்மை கலந்திருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
