“ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்து ரேப் கேஸ் போடுங்க” அரசு ஊழியர்களைப் பொய் வழக்கில் சிக்க வைக்கச் சொன்ன கொடூரம்… வீடியோ ஆதாரத்தால் சிக்கிய விவசாய சங்க நிர்வாகி..!!

By Soundarya on சித்திரை 3, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மரம் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்குப் போடச் சதி செய்ததாகக் கிசான் யூனியன் நிர்வாகி ஒருவரின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய கிசான் யூனியனின் (BKU) மாவட்டத் துணைத் தலைவர் மதன் சிங் ராணா, வனத்துறை ஊழியர்களைப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைப்போம் என மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சம்பவத்தன்று, வனத்துறை குழுவினர் சட்டவிரோதமாக மரம் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை மறித்து, கடத்தல்காரர்களைக் கைது செய்தனர். இதைக் கேள்விப்பட்ட மதன் சிங் ராணா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “யாராவது ஒரு பெண்ணை அழைத்து வந்து இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை (Rape) வழக்குப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் இவர்களுக்குப் புத்தி வரும்” என்று வெளிப்படையாகச் சதித் திட்டம் தீட்டியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்து, பிடிபட்டிருந்த கடத்தல்காரர்களில் ஒருவரை அவர் வலுக்கட்டாயமாக விடுவித்துக் கூட்டிக் கொண்டு சென்றார்.

   

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், மதன் சிங் ராணா மற்றும் மரம் கடத்தல்காரர்கள் மீது அரசுப் பணியைத் தடுத்தல், கடத்தல் மற்றும் சதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்த மதன் சிங், தான் விவசாயிகளுக்காகப் போராடுவதாகவும், அதிகாரிகளைப் பயமுறுத்துவதற்காகவே அப்படிப் பேசியதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அரசு அதிகாரிகள் மீது பொய்ப் புகார் அளிக்கத் தூண்டிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.