ஐதராபாத்தைச் சேர்ந்த 35 வயதான சூர்யாபாய் என்பவர், உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்த காணொளிகள் வைரலாகின. தன்னைப் பெரிய கோடீஸ்வரராகக் காட்டிக்கொண்ட அவர், தன்னிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாகக் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, வருமான வரித்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் நடத்திய விரிவான ஆய்வில், அவர் அணிந்திருந்தவை அனைத்தும் உண்மையான தங்க நகைகள் அல்ல என்பது அம்பலமானது. அவை வெறும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேடியம் பூசப்பட்ட செம்பு நகைகள் என்பது தெரியவந்தது. சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், சமூக வலைதளங்களில் ‘தங்க மனிதர்’ என்று பிரபலமாக அழைக்கப்பட வேண்டும் என்ற ஆசையிலுமே தான் இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். உண்மையை அறிந்த போலீசார், எச்சரிக்கை விடுத்து அவரை விடுவித்தனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கேலிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாகியுள்ளது.
