பெரம்பூரில் பிரச்சாரம் முடக்கம்…? காவல்துறையின் மெத்தனத்தால் விஜய் அதிருப்தி…. சி.டி.ஆர். நிர்மல்குமார் புகார்…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரசாரப் பாதையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியதால், விஜய்யின் வாகனம் நகர முடியாமல் தவித்ததாகவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது போக்குவரத்தைச் சீர்செய்யவோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் த.வெ.க இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் புகார் மனுவில், காவல்துறையின் மெத்தனப் போக்கால் பிரசாரப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க விஜய்யின் பரப்புரைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு முக்கியக் கட்சித் தலைவரின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்டுள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.