மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில், ஆத்திரமடைந்த தந்தை ஒருவர் தனது மூன்று வயது மகனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேசலை கிராமத்தைச் சேர்ந்த ரத்தன் சிங் உய்கே என்ற நபர், வெள்ளிக்கிழமை மாலை தனது மகன் வீரேந்திர குமார் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட கோபத்தில் கோடாரியால் அவன் கழுத்து மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான். கால்நடைகளை ஓட்டிவிட்டு வீடு திரும்பிய தாய் சுனிதா, ரத்தக் கறைகளுடன் கிடந்த தனது மகனின் உடலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரூப்ஜார் காவல்துறையினர், தப்பியோட முயன்ற ரத்தன் சிங்கை கைது செய்தனர்.
இதனால் முதற்கட்ட விசாரணையில், தனக்கு ஏற்பட்ட திடீர் கோபத்தால் குழந்தையைக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், ஒரு பச்சிளம் குழந்தையைக் கொல்லும் அளவுக்கு அத்தகைய கோபம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்ற மகனையே தந்தை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
