உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது தேர்வு முடிவைப் பெற்றும், அதில் தோல்வியடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 2009-ஆம் ஆண்டு பேட்ச் மாணவர் ஒருவர், தனது எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டு முடிவுகள் வராததால் நீண்ட காலமாகப் போராடி வந்தார்.
மேலும் சுமார் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த முடிவுகளை வெளியிடக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியான போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவர் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துக் கல்லூரி நிர்வாகம் கூறுகையில், அந்த மாணவருக்குப் பழைய விதிகளின்படி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதே கல்லூரியில் 1998 மற்றும் 2010-ஆம் ஆண்டு பேட்ச்களைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களின் முடிவுகளும் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி ஒரு மாணவர் 10 ஆண்டுகளுக்குள் தனது மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற போதிலும், இவர்கள் பழைய விதிகளின் கீழ் வருவதால் இவ்வளவு காலம் கல்லூரியில் தொடர முடிந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மருத்துவர் கனவோடு காத்திருந்த மாணவருக்குத் தோல்வியே மிஞ்சியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
