திடீர் திருப்பம்… சர்ச்சை பேச்சு முதல் நீதிமன்ற தடை வரை… முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

By Rajeshwari on பங்குனி 26, 2026

Spread the love

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொன்முடிக்கு எதிராக பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், பொன்முடி நேரில் ஆஜராகுமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது. இந்தச் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இத்தகைய புகார்களில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

   

இதையடுத்து, பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாகப் புகார் அளித்த உமா ஆனந்தன் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இந்தத் தீர்ப்பு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.