தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களே கவனமாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவி ஏன் அந்த இடத்திற்குச் சென்றார் என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.
எஸ்.வி.சேகரின் இந்த கருத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலேயே தவறு இருப்பது போல அமைந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பிரபல பின்னணி பாடகி சின்மயி இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இந்தியாவில் தொடர்கதையாக உள்ளது என்றும், எவ்வித அச்சமுமின்றித் தங்களுக்குப் பிடித்த இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடிய ஆண்களால் பெண்களின் இந்தத் துயரத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், காவல்துறையினரால் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க முடியாது எனப் பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
