ஹைதராபாத்திலிருந்து பாமூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது, எதிரே வந்த டிப்பர் லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் தாக்கத்தால் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் பேருந்திற்குள் சிக்கிக்கொண்ட 10 பயணிகள் தப்பிக்க முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40 பயணிகள் பயணித்த அந்தப் பேருந்தில், தீ மளமளவென பரவியதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
