மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வஹோலி பகுதியில் 18 வயதுடைய இந்துப் பெண் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த முஸ்லிம் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணை அந்த இளைஞர் ‘லவ் மற்றும் மாந்தீரிகம் மூலம் வசியப்படுத்தி அழைத்துச் சென்றதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் லோனி கண்ட் காவல் நிலையத்தின் முன்பு திரண்ட இந்து அமைப்பினர், அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இருப்பினும், தான் ஒரு மேஜர் வயது வந்தவர் என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் அந்தப் பெண் காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார். தனது உறவினர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய அவர், அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சட்டப்படி அந்தப் பெண் தனது முடிவை எடுக்க சுதந்திரம் கொண்டவர் என்று தெளிவுபடுத்திய காவல்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளையும் தேவையற்ற தூண்டுதல்களையும் நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
