கரூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெண்கள் குறித்துப் பேசிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு திரண்டிருந்த பெண் நிர்வாகிகளைப் பார்த்து, “ஒல்லியாக இருப்பது முருங்கைக்காய்… குண்டாக இருப்பது பூசணிக்காய்” என்று உடல் அமைப்பை வைத்து ஏளனம் செய்ததோடு, அவர்களை ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டிய இடத்தில், ஒரு முன்னாள் அமைச்சர் பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் சைகை காட்டிப் பேசியது அங்கிருந்த பெண்கள் மத்தியில் பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெண்களைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்துத் தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில், “பெண்களுக்குச் சேலை வழங்கினால், அவர்கள் பாவாடை கேட்கிறார்கள்” என்று ஆபாசமான தொனியில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளானது. தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அதே பாணியில் பெண்களின் உடல்வாகு குறித்துப் பேசியிருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்களின் தரம் தாழ்ந்த அரசியல் கலாச்சாரத்தையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
பெண்களை வெறும் காட்சிப் பொருளாகவும், கிண்டலுக்குரியவர்களாகவும் கருதும் இத்தகைய போக்கிற்குப் பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டிய தலைவர்களே, பொது மேடைகளில் அவர்களை அவமானப்படுத்துவது வேதனைக்குரியது எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் முன்னாள் அமைச்சர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
