“சூனியம் செய்ததாக சந்தேகம்”… ஒரு குடும்பத்தையே அழித்த கிராமம்… பழிவாங்கப்பட்ட பிஞ்சு உயிர்…. நெஞ்சை உறைய வைக்கும் துயரம்….!

By Nanthini on பங்குனி 18, 2026

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா கிராமத்தில், மந்திரவாதி என்று சந்தேகத்தின் பேரில் பழங்குடியின தம்பதி மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோர் கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தர்பாரி முர்மு (50), அவரது மனைவி மக்கோ பாஸ்கி (45) மற்றும் அவர்களது மகன் ஜிதே நாராயண் முர்மு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை நள்ளிரவு இவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரத்தக் கறையுடன் கூடிய கோடரியைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த குடும்பத்தினர் மாந்தீரிகம் மற்றும் சூனியத்தில் ஈடுபடுவதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப்பட்டதே இந்த கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த பயங்கர குற்றத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்த்லால் முர்மு, ஹேம்லால் முர்மு மற்றும் தலாபாபு முர்மு ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

பழங்குடியின கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கைகள் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோடா மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.