மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. வரும் மே 8ஆம் தேதி முதல் இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டு வரும் ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ (End-to-End Encryption) வசதி நீக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய இந்த அம்சம் நீக்கப்படுவது டிஜிட்டல் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக, ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ என்பது ஒரு செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர இடையில் இருக்கும் மெட்டா நிறுவனம் உட்பட வேறு யாராலும் அந்தத் தகவல்களைப் பார்க்கவோ அல்லது படிக்கவோ முடியாதபடி பாதுகாக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். தற்போது இந்த வசதியை இன்ஸ்டாகிராம் உரையாடல்களில் இருந்து முழுமையாக நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் இன்ஸ்டாகிராம் மெசேஜ்களின் பாதுகாப்புத் தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது தளத்தின் புதிய விதிகளை அமல்படுத்துவதற்காகவோ இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், வாட்ஸ்அப் போன்ற பிற மெட்டா செயலிகளில் இந்த வசதி தொடரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஏன் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை பயனாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மே 8-க்குப் பிறகு இன்ஸ்டாகிராம் நேரடிச் செய்திகள் (Direct Messages) மீதான தனியுரிமை அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
