லக்னோவில் தாய் மற்றும் மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்தப் படுகொலைகளைச் செய்த அதே பகுதியைச் சேர்ந்த கிஷன் ராவத் என்பவனைக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். தப்பியோட முயன்ற கிஷனின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், அவன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளான்.
இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் பார்ப்போரை அதிர வைத்துள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணிடம் கிஷன் வெறும் 160 ரூபாய் கடன் வாங்கியிருந்தான். பலமுறை அந்தப் பெண் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டும், அவன் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளான். சம்பவத்தன்று இரவு, பணத்தைத் திருப்பித் தரும் சாக்கில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த கிஷன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர் எதிர்த்ததால் அவரைக் கொலை செய்துள்ளான்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு, அவரைக் காப்பாற்ற ஓடி வந்த அவரது கண்பார்வையற்ற மகன் ஷதாப்பையும் அந்த நபர் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். வெறும் 160 ரூபாய்க்காகவும், தனது காம வெறிக்காகவும் ஒரு தாயையும், மாற்றுத்திறனாளி மகனையும் கொன்ற இந்தச் சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
