சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் முனீஸ்வரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பர்களாலேயே பீர் பாட்டிலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அனந்தபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள சதீஷ் என்பவரது வீட்டு மாடியில், சதீஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து முனீஸ்வரன் மது அருந்தியுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், நண்பன் சதீஷின் மனைவியைப் பற்றி முனீஸ்வரன் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் முனீஸ்வரனைக் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தவறாகப் பேசவே, பொறுமையிழந்த இருவரும் அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து முனீஸ்வரனின் கழுத்தை அறுத்துத் துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சதீஷ் மற்றும் கார்த்திகேயனைத் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுப் பழக்கமும், எல்லை மீறிய பேச்சும் ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
