ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய சரமாரி வான்வழித் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில், தெஹ்ரானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
இதனால் ஏற்பட்ட பயங்கர வெடிச்சம்பவங்களைத் தொடர்ந்து, விண்ணைத் முட்டும் அளவிற்கு ராட்சத நெருப்புக் கோளங்களும் கரும்புகையும் தெஹ்ரான் நகரையே சூழ்ந்தன. இந்தத் தாக்குதல் ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்டதாகவும், ஈரானிய ராணுவத்தின் செயல்பாடுகளை முடக்க இது அவசியமான நடவடிக்கை என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஹைஃபாவை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே லெபனான் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்தப் போர், தற்போது இரு நாடுகளின் பொருளாதார ஆதாரங்களான எண்ணெய் நிலையங்களை நேரடியாகத் தாக்குவதன் மூலம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல், உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் தங்களின் தாக்குதல்களைத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
