கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள சிக்கீரண்ணாமாலிகே என்ற கிராமத்தில், மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையில் மருமகள்கள் முட்டிக்கொள்ளும் வினோதமான திருவிழா அரங்கேறியுள்ளது. பொதுவாக மாமியார்-மருமகள் உறவு என்றாலே சச்சரவுகளும், மனக்கசப்புகளும் நிறைந்திருக்கும் என்ற பிம்பம் நிலவி வரும் சூழலில், இந்த வினோத சடங்கு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்குள்ள அகோபலா நரசிம்மசாமி கோவிலின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு இந்தச் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்தும் வகையில், தேரோட்டத்தின் போது மருமகள்கள் தங்கள் மாமியார்கள் மற்றும் நாத்தனார்களின் தலையில் முட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குடும்பத்திற்குள் இருக்கும் கசப்புகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த வினோத நேர்த்திக்கடனின் அடிப்படை நோக்கம் ஆகும்.
மருமகள்கள் தங்கள் மாமியாரைத் தாயாகவும், நாத்தனாரைச் சகோதரியாகவும் கருதுவதையும், அதேபோல் மாமியார்-நாத்தனார்கள் மருமகளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக்கொள்வதையும் இந்தத் திருவிழா வலியுறுத்துகிறது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம், வெல்லம் மற்றும் நாணயங்களை வீசி எறியும் வேளையில், இந்த முட்டிக்கொள்ளும் சடங்கு உற்சாகமாக நடைபெறுகிறது. இந்த வினோத வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
குடும்பங்கள் செழிக்கவும், அனைவரும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழவும் இந்தச் சடங்கு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். கசப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு அன்பால் பிணைக்கப்படும் இத்தகைய திருவிழாக்கள் நம்மூரிலும் நடந்தால் குடும்ப உறவுகள் மேம்படும் எனப் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் திருவிழா தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
