ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர் காரணமாக, கத்தாரில் உள்ள எல்.என்.ஜி (LNG) திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா தனது எரிவாயு தேவையில்லை பூர்த்தி செய்ய கத்தாரையே பெரிதும் நம்பியிருப்பதால், இந்த உற்பத்தி நிறுத்தம் இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகளாவிய சூழலை சமாளிக்க, இந்திய எரிவாயு நிறுவனங்களான கெயில், பெட்ரோனெட் எல்.என்.ஜி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை உள்நாட்டுத் தொழில்துறைகளுக்கான எரிவாயு விநியோகத்தை 10 முதல் 30 சதவீதம் வரை அதிரடியாகக் குறைத்துள்ளன.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க புதிய டெண்டர்களை வெளியிடவும், மாற்று வழிகளை ஆராயவும் இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த போர் சூழலால் இந்தியத் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது சீனாவும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
