கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையம் பகுதியில், காதல் விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த திலீபன் என்பவர் நடத்தி வந்த ஹோட்டலில், அன்பு எஸ்தர் என்ற பெண் பணியாற்றி வந்தார்.
இதனால் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்த பிரேம் ஆனந்த் என்ற ஆட்டோ ஓட்டுநர், எஸ்தரை நான்காவதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால், எஸ்தர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஹோட்டல் உரிமையாளர் திலீபனுடன் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கொல்ல முயன்று சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை எஸ்தரின் வீட்டிற்குச் சென்ற பிரேம் ஆனந்த், அங்கு திலீபன் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். அதோடு நிறுத்தாமல், வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைக்கவும் முயற்சித்துள்ளார்.
மேலும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த எஸ்தர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பிரேம் ஆனந்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
