சென்னையின் அசோக் நகரில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த வீடு, சமூக வலைதளங்களில் “டிமாண்டி காலனி 2.0” என்று அழைக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரீல்ஸ் மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் சிலர், இரவு நேரங்களில் இந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள சிதறிக் கிடக்கும் பொருட்கள் மற்றும் பழைய புகைப்படங்களை வீடியோ எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் அமானுஷ்யமானவை என்ற பிம்பத்தை உருவாக்கி பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வீட்டின் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், இது ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை அதிகாரியாக இருந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமானதாகும். இவர் தனது மனைவி கஸ்தூரியுடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். தங்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், வயதான தம்பதியினர் இருவரும் அந்த வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்தனர். இவர்களது அமைதியான வாழ்க்கை ஒரு கோரமான சம்பவத்தால் முடிவுக்கு வந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, பணத்திற்கும் நகைக்கும் ஆசைப்பட்ட ஒரு கும்பல், சரவணன், அவரது மனைவி மற்றும் அவர்களது வீட்டு வேலைக்காரி ஆகிய மூவரையும் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்தது. இந்தச் சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினர் விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, பராமரிப்பின்றி விடப்பட்ட அந்த வீடுதான் இன்று சிதிலமடைந்து பாழடைந்து காணப்படுகிறது.
தற்போது இந்த வீடு சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்படுவதால், அங்கு தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, அந்த வீட்டின் முன் ஒரு காவல்துறை அதிகாரி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். எனவே, மர்மங்கள் ஏதுமற்ற இந்த வீட்டைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு வீடியோ எடுக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
