“அப்பா நீ செத்துடு”…. தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்… நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… அரியலூரில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்….!

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தந்தையை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை என்ற கூலித் தொழிலாளியின் மகன் மணிகண்டன் (27), வேலைக்குச் செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மகனின் போக்கைக் கண்டித்த தந்தை, அவரை நல்வழிப்படுத்த முயன்றதே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தந்தையிடம் இருசக்கர வாகனத்தைக் கேட்டுத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே அமர்ந்து பிச்சப்பிள்ளை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது மணிகண்டன் பெட்ரோலை ஊற்றியுள்ளார். எதிர்பாராத விதமாக சிகரெட் நெருப்பு பெட்ரோலில் பற்றி எரியத் தொடங்கியதில் பிச்சப்பிள்ளையின் உடல் முழுவதும் தீ பரவியது.

   

பிச்சப்பிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தந்தையை எரித்துக் கொல்ல முயன்ற மகனின் இந்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை உடனடியாகக் கைது செய்தனர். குடும்பத் தகராறு மற்றும் மதுப் பழக்கத்தால் பெற்ற தந்தையையே உயிருடன் எரிக்க முயன்ற இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள இந்தச் சோகம் அரியலூர் மாவட்டத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.