திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு (பிப். 13, 2026) பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றிருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறிபோகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்
ஏழை, எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகச் சாடிய விஜய், குழந்தையை இழந்த பெற்றோருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் பயோ-மெட்ரிக் (Bio-metric) முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், பிரசவ வார்டுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
