ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் அரங்கேறியுள்ள இந்த “ஹனிமூன் கொலை” சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிஷ் (27) மற்றும் அஞ்சலி (23) ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக விமரிசையாகத் திருமணம் நடந்தது. ஆசிஷ் முதுகலை மற்றும் பி.எட் முடித்த பட்டதாரி ஆவார். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடந்த இந்தத் திருமணம், ஒரு அழகான வாழ்க்கையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஞ்சலியின் வஞ்சகத்தால் அது கொடூரமான கொலையில் முடிந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, அஞ்சலி திட்டமிட்டே தனது கணவர் ஆசிஷை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய பாதைக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அஞ்சலியின் முன்னாள் காதலன் சஞ்சு மற்றும் அவனது நண்பர்கள், ஆசிஷை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் இது ஒரு விபத்து மற்றும் கொள்ளைச் சம்பவம் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, அஞ்சலி தனது நகைகளைக் காதலனிடம் கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மயங்கிக் கிடப்பது போல நாடகமாடினார்.
தொடக்கத்தில் இது சாலை விபத்து என்று கருதப்பட்டாலும், ஆசிஷின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அஞ்சலியின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. தீவிர விசாரணையில், திருமண விழா ஒன்றில் வெயிட்டராகப் பணியாற்றிய சஞ்சு என்பவருடன் அஞ்சலிக்கு இருந்த கள்ளக்காதல் அம்பலமானது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்த இந்தத் கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட அஞ்சலி இக்கொடூரத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது.
இந்தத் துரோகம் ஆசிஷின் குடும்பத்தை மட்டுமல்லாது, அஞ்சலியின் சொந்தக் குடும்பத்தையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. “தவறு செய்த அஞ்சலிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவளது சொந்தக் குடும்பத்தினரே ஆக்ரோஷமாகக் கூறியுள்ளனர். தற்போது அஞ்சலி, அவரது காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு சாதாரண ‘வெயிட்டருக்காக’ நன்கு படித்த, அன்பான கணவனைக் கொலை செய்த இந்தப் பெண்ணின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
