தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எவ்வித வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தரப்பில் 14 சட்டமன்றத் தொகுதிகள் கோரப்படுவதாகக் குறிப்பிட்டார். “14” என்ற எண்ணின் கூட்டுத்தொகை “5” என்பதால், அது தங்களுக்கு ராசியான எண் என்று கருதி பிரேமலதா விஜயகாந்த் அந்த எண்ணிக்கையில் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு தேமுதிக சம்மதித்தால் கூட்டணி உறுதியாகும் என்றும் அவர் மாவட்டச் செயலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிகவுக்கு பெரிய அளவிலான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அந்த கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு அதிமுக இம்முறை அவர்களை இணைக்க விரும்புகிறது. திமுகவும் தேமுதிகவுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிகவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஆய்வுகள் மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதிமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேமுதிகவின் கோரிக்கையைச் சற்றே குறைத்துப் பேசி சுமுகமான முடிவை எட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அதிமுக தலைமையிலான கூட்டணி பலமானதாக மாறும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
