“கிழவி நீ செத்து தொல”…. வண்டி வாங்கிக் கொடுத்த பாட்டியையே பொக்லைனால் நசுக்கிய பேரன்…. ஊத்தங்கரையில் நிகழ்ந்த பயங்கரம்….!

By Nanthini on மாசி 3, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பேரனே தனது பாட்டியை பொக்லைன் இயந்திரத்தால் தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான ராணி, தனது பேரனான சிரஞ்சீவி வேலை இல்லாமல் இருந்ததைக் கண்டு, அவர் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தனது பெயரில் கடன் பெற்று பொக்லைன் இயந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளார். பெண் பெயரில் கடன் வாங்கினால் வட்டி குறைவு என்பதால், பேரனின் எதிர்காலத்திற்காக யோசிக்காமல் ராணி இந்த முடிவை எடுத்துள்ளார். ஆரம்பத்தில் முறையாக தொழில் செய்து வந்த சிரஞ்சீவி, கடந்த சில மாதங்களாக கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி தனது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த சிரஞ்சீவி மீண்டும் கடன் தொகை கேட்டுத் தகராறு செய்துள்ளார். அப்போது, “உன்னால் வட்டி கட்ட முடியாவிட்டால் வண்டியைத் திருப்பி ஒப்படைத்துவிடு” என்று ராணி கண்டிப்புடன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தான் கொண்டு வந்த பொக்லைன் இயந்திரத்தை வைத்தே தனது சொந்தப் பாட்டி என்றும் பாராமல் அவரைத் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை காவல்துறையினர், ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற பேரன் சிரஞ்சீவியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னேற்றத்திற்காக உதவிய பாட்டியையே எமனாக மாறி பேரன் கொன்ற இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.