தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 5 மாத பச்சிளம் குழந்தை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் (26) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (42) என்ற விதவைப் பெண்ணிற்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாகேஷிற்கு கடந்த 2020-ம் ஆண்டு மமதா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், இந்த முறையற்ற உறவு குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
தனது கணவருடனான தொடர்பைக் கைவிடுமாறு மமதா பலமுறை சுஜாதாவை எச்சரித்ததோடு, கணவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, மமதா உயிரோடு இருக்கும் வரை தன்னால் நாகேஷுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது எனக் கருதி அவரைக் கொல்லத் திட்டமிட்டார். இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவர், கடந்த சனிக்கிழமை காலை நாகேஷ் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து பெட்ரோல் கேன், மிளகாய் பொடி மற்றும் கத்தியுடன் அங்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த சுஜாதா, மமதா தனது 5 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில், அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் கருகி அலறிய மமதா மற்றும் அவரது குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலைச் செய்த பின் சுஜாதா அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சுஜாதாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், நாகேஷ் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பொறுக்க முடியாமல் பொறாமையினால் சுஜாதா இந்த காரியத்தைச் செய்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த திட்டமிட்ட கொலையில் நாகேஷிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
