கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மனைவியின் தீராத உடல்நலக் குறைவால் மனமுடைந்த மின்வாரிய அதிகாரி ஒருவர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த கமலேஷ் (48), தனது மனைவி இலக்கியா மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மகள் எக்ஷிதா ஏஞ்சலுடன் வசித்து வந்தார்.
கமலேஷின் மனைவி இலக்கியா நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் குணமாகாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் வேதனையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்த கமலேஷ், தீவிரமான முடிவை எடுத்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இந்த விபரீத முடிவை எடுக்கும் முன், தனது நிலையை விளக்கி கமலேஷ் ஒரு வீடியோவை பதிவு செய்து நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இன்று அதிகாலை அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த உருக்கமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
