இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு (101), மீண்டும் ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (பிப். 01) இரவு அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
வயோதிகம் மற்றும் நுரையீரல் தொற்று தொடர்பான பிரச்சினைகளால் அவர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் 26-ம் தேதி தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தச் சுவாசக் கோளாறு தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூத்த மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
