“60 லட்சம் நகை.. காஸ்ட்லி பட்டுப்புடவை, கையில் ஐபோன்”… போலீசாரையே அதிரவைத்த ‘அழகு’ ராணியின் பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on தை 31, 2026

Spread the love

பெங்களூருவில் ஆடம்பர வாழ்க்கைக்கும் மேக்கப் மோகத்திற்கும் அடிமையாகி, நகை திருட்டில் ஈடுபட்டு வந்த ‘ஐபோன் திவா’ காயத்ரி மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் லட்சுமி அம்மாள் என்பவரின் 30 கிராம் தங்கச் சங்கிலி திருடுபோன புகாரை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இந்த கில்லாடி தம்பதியை போலீசார் வலைவீசிப் பிடித்தனர்.

மைசூரைச் சேர்ந்த இந்த தம்பதியினர் தொடக்கத்தில் திருவிழாக்களில் பொம்மைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்று வந்தனர். ஆனால், உழைத்து வாழ்வதை விட குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற ஆசையில் திருட்டுத் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பாக, காயத்ரியின் திருட்டுப் பாணி போலீசாரையே திகைக்க வைத்துள்ளது. திருடுவதற்கு முன்பாக பியூட்டி பார்லர் சென்று தன்னை முழுமையாக மெருகேற்றிக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

   

ஒருமுறை மேக்கப் போட சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் காயத்ரி, மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை அழகு நிலையங்களுக்காகவே செலவிட்டுள்ளார். விலை உயர்ந்த பட்டுச் சேலைகள், லேட்டஸ்ட் மாடல் ஐபோன் மற்றும் அதீத அலங்காரத்துடன் கூட்ட நெரிசலில் வலம் வருவதால், அவரைப் பார்க்கும் எவருக்கும் இவர் ஒரு திருடி என்ற சந்தேகமே வராது. இந்த கௌரவமான தோற்றத்தை வைத்தே பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகளை மிக லாவகமாகத் திருடி வந்துள்ளார்.

   

விசாரணையில், “அழகுதான் எனது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், நல்ல அலங்காரத்துடன் சென்றால் பெண்கள் என்னை எளிதில் நம்புவார்கள்” என்று காயத்ரி போலீசாரிடம் திமிராக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த தம்பதியிடமிருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 398 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இந்த தம்பதியினர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.