தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நேற்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “மாற்றம் ஒன்றுதான் மாறாதது; அந்த மாற்றம் நிலையானது” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் தேமுதிகவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” என்று கூறிய அவர், தொண்டர்களும் மக்களும் விரும்பும் வகையில் ஒரு வலுவான கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனத் தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவை அவசரம் காட்டாமல், முறைப்படி உரிய நேரத்தில் அறிவிப்போம் எனத் தொண்டர்களுக்கு உறுதி அளித்தார்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக யாரிடம் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சொல்லப்படும் வேளையில், “மாற்றத்தை” அவர் வலியுறுத்துவது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பாகவே கூட்டணி குறித்த இறுதி முடிவைத் தலைமை அலுவலகத்தில் அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
