வறுமையிலும் ஒரு ‘மகாராணி’… சாலையில் கிடந்த ரூ.45 லட்சத்தை மதிக்காத பத்மா… இப்போது இந்தியா முழுவதும் இவரது முகம் தான்….!

By Nanthini on தை 30, 2026

Spread the love

சென்னையில் 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மா அவர்களின் நற்பண்பைப் போற்றும் வகையில், இந்திய அஞ்சல் துறை அவரது உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவித்துள்ளது. ஒரு சாமானியப் பெண்ணின் நேர்மைக்குக் கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் 50 வயதான பத்மா, கடந்த ஜனவரி 11-ம் தேதி தி.நகர் பகுதியில் பணியில் இருந்தபோது, சாலையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. எவ்வித ஆசைக்கும் இடம் கொடுக்காத பத்மா, உடனடியாக அந்த நகைகளைத் தனது மேற்பார்வையாளர் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதன் உரிமையாளரிடம் சேர வழிவகை செய்தார்.

   

பத்மாவின் இந்தத் தன்னலமற்ற செயலைப் பாராட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்துக் கௌரவித்ததுடன், அரசு சார்பில் 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், பத்மாவின் நேர்மையை உலகறியச் செய்யும் வகையில் அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. பொதுவாகப் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கே இத்தகைய கௌரவம் வழங்கப்படும் நிலையில், ஒரு தூய்மைப் பணியாளருக்கு இது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

   

வறுமையிலும் நேர்மையைக் கடைப்பிடித்த பத்மா, இன்றைய சமூகத்திற்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். கடின உழைப்பால் ஈட்டும் வருமானமே நிலையானது என்பதைத் தனது செயலின் மூலம் அவர் மெய்ப்பித்துள்ளார். அஞ்சல் துறையின் இந்த முன்னெடுப்பு, நேர்மையாகச் செயல்படும் எளிய மனிதர்களுக்கும் சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துள்ளது.