ஜனநாயகனா..? சட்டமன்ற தேர்தலா…? விஜய்க்கு முற்றும் நெருக்கடி… “அன்று MGR-க்கு நடந்தது நடந்திரும்” விஜய்யை எச்சரித்த செங்கோட்டையன்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

நடிகர் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் என இருமுனை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின்  உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், விஜய்க்கு அரசியல் முதிர்ச்சியான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக, சினிமா மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது சவாலானது என்பதால், தேர்தலுக்கு முன் தெளிவான முடிவை எடுக்க அவர் வலியுறுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், “ஆட்சியில் பங்கு” என்ற விஜய்யின் அறிவிப்புக்குப் பிறகு இதுவரை முக்கிய கட்சிகள் எதுவும் தவெக கூட்டணியில் இணையாதது தொண்டர்களிடையே ஒருவித தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.

மறுபுறம், கரூர் மாநாட்டு விபத்து தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், அங்கு இரண்டு முறை பல மணிநேரம் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணைகள் மற்றும் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வருவது போன்றவை, பாஜக போன்ற தேசியக் கட்சிகளின் மறைமுக அழுத்தம் என தவெக தரப்பில் விமர்சிக்கப்படுகிறது. “எந்த அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன்” என விஜய் பகிரங்கமாக அறிவித்தாலும், படத்தின் ரிலீஸ் தாமதமாவது மற்றும் சிபிஐ விசாரணையின் தீவிரத்தால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் சிக்கல்களுக்கு இடையே, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செங்கோட்டையன் வழங்கிய  அட்வைஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது, 1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, நடிப்பையும் அரசியலையும் ஒரே நேரத்தில் கையாள விரும்பினார். அப்போது அவர் ‘உன்னை விடமாட்டேன்’ என்ற புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இதுவே இளையராஜா – எம்.ஜி.ஆர் இணைந்த முதல் படமாகவும் அமைந்தது. இருப்பினும், “ஒரு முதலமைச்சர் சினிமாவில் நடிப்பது மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்; ஒன்று நடிப்பைத் தொடருங்கள், இல்லையென்றால் அரசியலில் கவனம் செலுத்துங்கள்” என்று அவரது நெருங்கிய அரசியல் ஆலோசகர் நாவலர் நெடுஞ்செழியன் எச்சரித்தார். அந்தத் தடையால் மிகப்பெரிய பொருட்செலவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்ட அத்திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

   
இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையில் தற்போது விஜய் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் நெருக்கடியால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதை விஜய்க்கு உணர்த்தியுள்ளார். “சினிமாவா அல்லது 2026 தேர்தலா? என்பதில் தெளிவான முடிவெடுக்கத் தவறினால், எம்.ஜி.ஆர் அ அன்று எடுத்த கடினமான முடிவை நீங்களும் எடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 2026-ல் விஜய்யை அரியணையில் அமர்த்துவதே தனது இலக்கு என்று கூறி வரும் செங்கோட்டையன், விஜய்யின் இந்த “மவுன விரதத்தை” உடைக்க இத்தகைய வரலாற்றுப் பாடங்களை ஆலோசனையாக வழங்கி வருகிறார்.