தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பளிக்கப்படாத காரணத்தால், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, அவர் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்த செல்வகுமார், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தனது கட்சியினர் அரும்பாடுபடுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சில முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ சீரமைத்து, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள இவரது முடிவு, தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
