அதிமுகவின் அரியலூர் மாவட்ட முகமாக அறியப்பட்ட கவிதா G. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுகவில் அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த இவரது வருகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தவெகவின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் காய்களை நகர்த்தி வரும் சூழலில், அனுபவமிக்க இந்த அரசியல் வரவு முக்கியத்துவமிக்கதாகப் பார்க்கப்படுகிறது .
கட்சியில் இணைந்த கவிதா ராஜேந்திரனுக்குப் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்ற விஜய், தேர்தல் களப்பணிகளில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்ட அதிமுகவில் செல்வாக்குமிக்க ஒருவராக இருந்தவர் வெளியேறியது அதிமுகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், தவெகவின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த இவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிட விஜய் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
