தமிழக திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை வாரியத்துடனான சட்டப் போராட்டத்தால் திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி வெளியாகவில்லை. இப்படத்தில் ராணுவம் மற்றும் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்த நிலையில், விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. சென்னை உயர்நீதிமன்றம் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும், தணிக்கை வாரியம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் பட வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.
தற்போது இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. தணிக்கை வாரியத்தின் பிடிவாதம் மற்றும் ஓடிடி தளமான அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தத் தீர்ப்பு படத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக நிலவி வந்த இழுபறி ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டப் போராட்டங்களுக்கு இடையே, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் பிப்ரவரி 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தணிக்கை வாரியம் ‘U/A’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் விஜய்யின் அதிரடி திரையில் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது. பொங்கல் ரிலீஸ் தவறிய ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு, பிப்ரவரி மாத வெளியீடு குறித்த இந்தத் தகவல் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
