தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட அமைச்சர்கள் பலரும் தங்கள் பகுதிகளில் செல்வாக்கு மிக்க மாற்றுக்கட்சிப் பிரமுகர்களை திமுகவில் இணைத்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயரைப் பெறுவதற்காக அமைச்சர்கள் காட்டும் இந்த வேகம், கட்சிக்கு ஒருபுறம் பலமாகத் தெரிந்தாலும், மறுபுறம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவிய முக்கியப் புள்ளிகளுக்கு, வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். “கட்சிக்காகக் கஷ்டப்பட்ட எங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நேற்று வந்தவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதா?” என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சர்களின் இந்த அதிரடி நகர்வுகள், சில மாவட்டங்களில் உட்கட்சிப் பூசலாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இது தேர்தல் நேரத்தில் கட்சிக்கு எதிரொலிக்குமா அல்லது தலைமை இதனைச் சரிசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
