மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் காதலித்த குற்றத்திற்காக 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைனின் பன்வாசா பகுதியைச் சேர்ந்த அச்சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியும் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்த நிலையில், சிறுவன் சிறையிலடைக்கப்பட்டு சமீபத்தில்தான் விடுதலையாகி தனது மாற்றுத்திறனாளி தாயுடன் வசித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட உஜ்ஜைனிக்கு வந்த அச்சிறுவனை சிறுமியின் குடும்பத்தினர் வழிமறித்துள்ளனர். சிறுமியின் உறவினர்களான போலா பைராகி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், அச்சிறுவனை சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானமற்ற முறையில் அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கியுள்ளனர். பின்னர் சிறுவனின் கைகளை கயிற்றால் கட்டி, சங்கர்பூர் பகுதியிலிருந்து பன்வாசா காவல் நிலையம் வரை வீதியில் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக சிறுவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தான் தாக்கப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்டும் யாரும் முன்வரவில்லை என சிறுவன் வேதனையுடன் தெரிவித்துள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதில் தொடர்புடைய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், தனிமனித உரிமைகளை மீறும் வன்முறைச் செயலாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.
