தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme – MIS) பாதுகாப்பான முதலீட்டின் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வருமானமாக எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மத்திய அரசின் நேரடி ஆதரவுடன் செயல்படும் இத்திட்டத்தில் தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யப்படும் அசல் தொகைக்கு முழு பாதுகாப்பு இருப்பதோடு, முதலீட்டாளருக்கு அடுத்த மாதம் முதல் மெச்சூரிட்டி காலம் வரை வட்டித் தொகை வருமானமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதலீட்டு வரம்புகளைப் பொறுத்தவரை, தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டுக்கணக்கில் (Joint Account) 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, ஒரு தனிநபர் தனது கணக்கில் 9 லட்சம் ரூபாயை ஒரே தவணையாக முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி அவருக்கு மாதம் தோறும் சுமார் 5,550 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். கூட்டுக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது, மாத வருமானம் சுமார் 9,250 ரூபாயாக உயரும். குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்தே இத்திட்டத்தில் சேர முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த எவரும் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுடன் கணக்கைத் தொடங்கலாம். 5 ஆண்டுகளுக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், சில அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். அதாவது, 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால் அசலில் 2 சதவீதமும், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மூடினால் 1 சதவீதமும் கழிக்கப்படும். நிலையான வருமானம், அசல் பாதுகாப்பு மற்றும் எளிமையான நடைமுறை ஆகிய காரணங்களால் இத்திட்டம் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
