உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், திருமணமான 20 நாட்களிலேயே புதுமணப் பெண் ஒருவர் தனது மைத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2025 டிசம்பர் 11-ம் தேதி திருமணமான அந்தப் பெண், ஜனவரி 1-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மைத்துனரால் இந்த வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து தனது கணவரிடம் முறையிட்டபோது, அவர் நீதி பெற்றுத் தருவதற்குப் பதிலாக, மனைவியை மிரட்டி வாயடைக்கச் செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து புகார் அளிக்க முயன்றபோது கணவர், மைத்துனர் மற்றும் மாமியார் ஆகியோரால் அந்தப் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது பரேலியின் பரதாரி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதநேயமற்ற இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
