தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக பயணிகள் அடர்வு, எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான பேருந்து இயக்கத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகப் போக்குவரத்துக் கழகங்களின் திறமையான சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1,03,123 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக அரசு தரப்பில் ரூ.6.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை பணியாளர்களின் பணி நாட்களின் அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டில் 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு ரூ.85-ம், 151 முதல் 199 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு ரூ.195-ம், மற்றும் 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.625-ம் பொங்கல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கிராமப்புறங்கள் முதல் மாநகரங்கள் வரை தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்கி வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு, இந்தப் பண்டிகை கால அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
