இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தவும், சாமானிய மக்கள் எளிதாக டிக்கெட் பெறவும் மத்திய அரசு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தட்கல் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க ‘ஆதார் சரிபார்ப்பு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 5.73 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட புதிய எல்.எச்.பி (LHB) பொதுப் பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண வகுப்பு பயணிகளுக்கு அதிக இடவசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
பயணிகளின் வசதிக்காக அமிர்த் பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற விரைவு ரயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைச் சமாளிக்க கடந்த ஆண்டில் மட்டும் 43,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 76 முக்கிய நிலையங்களில் பயணிகள் தங்குமிடம் போன்ற நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அரசு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.
