மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த 89 வயது மூதாட்டி இருளாயி, உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற இவரால் ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது. இதுகுறித்து அவரது உறவினர்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்டதையடுத்து, விற்பனையாளர் நாகராணி தனது உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி ஒரு நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார்.
அரசு விதிகளின்படி மூதாட்டியின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்ற ரேஷன் ஊழியர்கள், அவரிடம் கைரேகைப் பதிவைப் பெற்றுக்கொண்டனர். பின்னர், பொங்கல் பரிசுத் தொகையான 3,000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலை ஆகியவற்றை அவரது இல்லத்திலேயே வைத்து வழங்கினர். ரேஷன் ஊழியர்களின் இந்த மனிதாபிமானச் செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் மூதாட்டியின் உறவினர்கள் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
