கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஆறு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஜாமுல் ஷேக் என்பவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகள் ஷனாத்துடன் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய நண்பரான யூசெப் என்பவருக்கும் இஜாமுலின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீதச் செயலை யூசெப் செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நைசாகப் பேசி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற யூசெப், அங்கு வைத்து சிறுமியைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் ஆதாரங்களை மறைக்க சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகே வீசிவிட்டுத் தப்பிச் சென்றார். நீண்ட நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் யூசெப் குழந்தையை அழைத்துச் செல்வது உறுதியானதை அடுத்து தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் கைது செய்தனர். நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட சாதாரண தகராறில் ஒரு பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
