கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் படங்களுக்கு தணிக்கை வாரியம் மூலம் நெருக்கடி அளிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்குப் பதிலளித்த அவர், இது போன்ற சிக்கல்கள் விஜய்க்குப் புதியதல்ல என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே தனது பட ரிலீஸுக்காக விஜய் கைகட்டி நின்று காத்திருந்ததை நினைவு கூர்ந்தார்.
திரைப்படங்களுக்கு தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவது இது முதல் முறையல்ல என்றும், ‘தக் லைஃப்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால், இதனை விஜய்க்கு எதிரான அரசியல் நெருக்கடியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய சரத்குமார், ஒரு படம் குறித்த நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் நிலையில், தான் நடித்த ‘அடங்காதே’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்காக யாரும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்தும் அரசியல் ரீதியாகவே நடப்பதாகக் கருதுவதை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திரையுலகில் நிலவும் இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை அரசியலோடு தொடர்புபடுத்துவது முறையல்ல எனத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அவருக்குத் திட்டமிட்டு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதையும் அவர் இதன் மூலம் மறுத்துள்ளார்.
