கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநாட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திரும்பிய திசை எங்கும் தேமுதிக கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று 2.30 மணிக்கு வருகை தரவுள்ளார். அதன் பிறகு கட்சிக் கொடியை ஏற்றி வைத்ததும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் 6:00 மணி அளவில் மாநாடு தொடங்கி நடைபெறுகிறது.
இதில் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சட்டசபை தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று நடைபெறும் மாநாட்டில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க உள்ளார். இதனால் இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
