விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் சூழலில், நடிகை சனம் ஷெட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரவிமோகனும் (ஜெயம் ரவி) தனது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “நானும் உங்களோடு நிற்கிறேன் விஜய் அண்ணா..! ஒரு தம்பியாக உங்களுக்கு பக்கபலமாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவை இல்லை, நீங்கள் தான் தொடக்கம். அந்த தேதி எப்போது வந்தாலும் பொங்கல் அப்போதுதான் தொடங்கும்,” என்று பதிவிட்டுள்ளார்.
நாளை வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் சட்ட சிக்கல்கள் காரணமாக ஒத்திவைக்கப்படும் நிலையில் உள்ளது. தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகக் கூறி படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இன்று இது தொடர்பான முக்கிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் பலரும் விஜய்க்கு ஆதரவாக அணிதிரண்டு வருகின்றனர்.
